குறுந்தொகை - 29

பாடலாசிரியர் - ஔவையார்
குறிஞ்சித்திணை  -
தலைவியை இரவில் காண்பது இனி அரிது என்பதால் மனம் வருந்தி தலைவன், தன் நெஞ்சிற்கே ஆறுதல் சொல்லிக் கொள்ளுதல்

நல்லுரை யிகந்து புல்லுரை தாஅய்ப்
பெயனீர்க் கேற்ற பசுங்கலம் போல 
உள்ளந் தாங்கா வெள்ள நீந்தி
அரிதவா வுற்றனை நெஞ்சே நன்றும் 
பெரிதா லம்மநின் பூச லுயர்கோட்டு 
மகவுடை மந்தி போல
அகனுறத் தழீஇக் கேட்குநர்ப் பெறினே
                       - ஔவையார்


சொற்பொருள்:                           நெஞ்சே -, நல் உரை இகந்து - நல்ல உரைகள் நீங்கி, புல் உரை தாஅய் - பயனற்ற உரைகள் பரவப் பெற்று, பெயல் நீர்க்கு ஏற்ற - பெய்தலை உடைய மழையின் நீரை ஏற்றுக் கொண்ட, பசு கலம்போல - சுடப் படாத பசு மண்ணாலாகிய பாண்டத்தைப் போல, உள்ளம் தாங்கா - உள்ளத்தினால் பொறுக்க முடியாத, வெள்ளம் நீந்தி - ஆசை வெள்ளத்தில் நீந்தா நின்று, அரிது - பெறுதற் கரியதை, அவாவுற்றனை - பெற விரும்பினை; உயர் கோடு - உயர்ந்த மரக் கொம்பில் உள்ள, மக உடை மந்தி போல - குட்டியை உடைய பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப் பெற்று அமைவது போல, அகன் உற - மனம் பொருந்த, தழீஇ - நின் கருத்தைத் தழுவிக் கொண்டு, கேட்குநர் - நின் குறையைக் கேட்டு நிறைவேற்றுவாரை, பெறின் - பெறுவாயாயின், நின் பூசல் - உனது போராட்டம், நன்றும் பெரிது - மிகவும் பெருமை உடையது.

கருத்துரைதன் விருப்பப்படி இரவில் வராது மறுப்பது, பெய்யும் மழையின் நீரை ஏற்றுக் கொண்ட சுடப்படாத பசு மண்ணாலாகிய பாண்டத்தை போல. உள்ளத்தால் பொறுக்க முடியாத ஆசை வெள்ளத்தில் நீந்தாமல் நின்று, பெருதற்கரியதைப் பெற விரும்புகிறாய். உயர்ந்த மரக்கிளையில் பெண் குரங்கு தன் குட்டியால் தழுவப் பெற்று அமைவது போல உன் கருத்தை ஏற்று, உன் குறையைக் கேட்டு நிறைவேற்றுவாரைப் பெரின் உன் போராட்டமும் நன்றாயும், பெருமையாயும் அமையும்.
(எனத் தன் நெஞ்சிற்கு ஆறுதல் சொல்லிக் கொள்கிறான்)

(
தலைவியை இரவில் காண்பது இனி அரிது என்பதால் மனம் வருந்தி இப்பாடல்)