குறுந்தொகை - 27

குறுந்தொகை - 27
பாடலாசிரியர் வெள்ளிவீதியார்
பாலைத்திணை -
(தலைவன் பிரிவினை தலைவியால் தாங்கமுடியாது எனக் கவலை அடைந்த தோழியிடம் தன் அழகு வீணாவதை தலைவி உரைப்பது)
 
கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்லான் றீம்பா னிலத்துக் காஅங்
கெனக்கு மாகா தென்னைக்கு முதவாது
பசலை யுணீஇயர் வேண்டும்
திதலை யல்குலென் மாமைக் கவினே.

                                -வெள்ளிவீதியார்



சொற்பொருள்                               
நல் ஆன் தீ பால் - நல்ல பசுவின் இனிய பாலானது, கன்றும் உண்ணாது - அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல், கலத்தினும் படாது - கறக்கும் பாத்திரத்திலும் விழாமல், நிலத்து உக்காங்கு - தரையில் சிந்தி வீணானது போல, திதலை - தேமல். என் மாமை கவின் - எனது மாமையாகிய பேரழகை, எனக்கும் ஆகாது - எனக்கு அழகு பயந்து நிற்பதாகாமலும், என்னைக்கும் உதவாது - என் தலைவனுக்கு இன்பம் பயவாமலும், பசலை உணீஇயர் வேண்டும் - பசலையானது தான் உண்ண விரும்பா நிற்கும்.

உரை-

நல்ல பசுவின் இனிமையான பாலானது, அப்பசுவின் கன்றினாலும் உண்ணப்படாமல்,கறக்கும் பாத்திரத்திலும் விழாமல், தரையில் சிந்தி வீணானது போல, எனது மாந்தளிர் போன்ற பேரழகு எனக்குப் பயந்து நிற்பதாகாமலும், என் தலைவனுக்கு இன்பம் தராமலும் பசலை படர்ந்து இரசிக்கப்படாமல் இருக்கும்.
(தலைவன் பிரிந்து சென்றதால் தலைவியின் மாந்தளிர் உடலழகு பசலைப் படர்ந்து நிறம் இழந்தது)