குறுந்தொகை -16

குறுந்தொகை -16
பாடலாசிரியர் பெருங்கடுங்கோ
பாலைத் திணை
தோழி கூற்று

(பொருள் ஈட்டும் பொருட்டுத் தலைவன் பிரிந்த காலத்தில், ‘அவர் நம்மை நினைப்பாரோ, நினையாரோஎன்று கருதிக் கவலையுற்ற தலைவியை நோக்கி, ‘‘அவர் சென்ற பாலை நிலத்தில் ஆண் பல்லி பெண் பல்லியை அழைக்கும் ஒலி கேட்டு உன்னை நினைத்து உடன் திரும்பி வருவார்’’என்று தோழி கூறி ஆறுதல் அளித்தது)



செய்யுள்

உள்ளார் கொல்லோ தோழி கள்வர்தம்
பொன்புனை பகழி செப்பங் கொண்மார்
உகிர் நுதி புரட்டு மோசை போலச்
செங்காற் பல்லி தன்றுணை பயிரும்
அங்காற் கள்ளியங் காடிறந் தோரே.
                        
பெருங்கடுங்கோ

சொற்பொருள்

உள்ளார் கொல்லோ-நம்மை உடையவன் நினைப்பானோ , பொன்புனை பகழி-இரும்பால் செய்யப்பட்ட அம்பு , செப்பம்-சோதனை நோக்கில் , உகிர் நுதி - விரல் நகம் , புரட்டும்-நெருடி பார்க்கும் , பயிரும்-அழைக்கும் , கள்ளியங்காடு-கள்ளி செடி நிறைந்த காடு

கருத்துரை  


கள்வர்கள் . இரும்பினால் செய்யப்பட்ட   அம்பை, தம் விரல்களால் நெருடி பார்ப்பார்கள். அப்போது எழும் ஒலியானது செங்கால்களை உடைய ஆண் பல்லியானது, தன் துணையாகிய பெண் பல்லியை அழைக்க எழுப்பும் ஒலியைப்போல், கள்ளிகளை உடைய கள்ளிக்காட்டை கடந்து செல்லும் போது. நம் தலைவன் ஆண் பல்லி பெண்பல்லியை அழைக்கும் ஒலி கேட்டு உன்னை நினைத்து உடன் திரும்பி வருவார்.