குறுந்தொகை - 15

குறுந்தொகை - 15.
பாடியவர் ஔவையார்
பாலை - செவிலி கூற்று

பறை பட, பணிலம் ஆர்ப்ப, இறைகொள்பு
தொல் மூதாலத்துப் பொதியில் தோன்றிய
நால் ஊர்க் கோசர் நல் மொழி போல,
வாய் ஆகின்றே-தோழி!-ஆய் கழல்
சேயிலை வெள் வேல் விடலையொடு
தொகுவளை முன்கை மடந்தை நட்பே.

   

பொருள்:
பறைபட-மேளம் ஒலிக்க, பணிலம் ஆர்ப்ப-சங்கு ஓசை எழ , இறை கொள்பு-திருமணம் புரிதல் ,பொது இல் -பொது இடம்,ஆய்கழல் -அழகிய கழல், சேயிலை-செம்மையான இலை(பசுமையான இலை), வெல்வேல்-வெள்ளி வேல்,தொகு வலை-நிறைய வளையல், மடந்தை-பேதை பெண்

கருத்துரை:
பறைகள் ஒலிக்கவும் சங்குகள் ஊதவும், பழைய முதிய ஆல மரத்தடியில் கூடிய பொதுமன்றத்தில் நான்கு பேர் கூடியிருக்கையில் கோசர்கள் உரைத்த சூளுரையை நிறைவேற்றியது போல, ஆண்களின் காலில் அணியும் அணியான கழல் அணிந்த, சிவந்த இலை போன்ற , வெள்ளி போன்ற வேலையும் உடைய தலைவனுடன், வரிசையாய் முன் கையில் வளையல்கள் அணிந்த  நம் பருவப்பெண்ணின் நட்பு உண்மையானது.
குறிப்பு:
(மோகூர் பழையன் என்பானுக்கு மோரியர்களுடனான போரில் உதவுவோம் என உறுதி கொடுத்து கோசர்கள் சொன்ன சொல்லை காப்பாற்றினார்களாம்  - அதுவே சொல்லப்பட்டுள்ளது)

நாலூர் கோசர் நன்மொழி-வரலாற்று செய்தி
மோகூர் பழையனுக்கு படைஉதவி வருவதாக தாம் சொன்ன சொல் தவறாமல் கோசர்கள் உதவி செய்தனர் .தென்னாற்காடு மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியில் மோகூர் ,ஆலம்பலம்,கோசர்பாடி ஆகிய இடங்கள் உள்ளன