குறுந்தொகை 7,

குறுந்தொகை 7,
பெரும்பதுமனார்,
பாலைத் திணை கண்டோர் சொன்னது
(தலைவனும் தலைவியும் தமரின் நீங்கி உடன்போன காலத்தில் எதிரே வந்தவர்கள், தலைவி காலில் அணிந்திருந்த சிலம்பினால் அவ்விருவருக்கும் மணம் நடைபெறவில்லை என்பதை உணர்ந்து இரங்கிக் கூறியது.)




வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார் கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையில் கால் பொரக் கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய் பயில் அழுவம் முன்னி யோரே.

பொருள்: 

வில்லோன் வில்லை உடையவன், காலன கழலே கால்களில் கழல் உள்ளது, தொடியோள் வளையல் உடைய பெண், மெல்லடி சிறிய அடி, மேலவும் அவற்றின் மேல், சிலம்பே சலங்கை, கொலுசு, நல்லோர் நல்ல மக்கள், யார் கொல் யார் இவர்கள், அளியர் பரிதாபத்திற்கு உரியவர்கள், தாமே ஆரியர் இவர்கள் ஆரியர்கள், கயிறாடு கயிற்றின் மேல் ஆடுதல், பறையில் பறையை கொட்டும் பொழுது, கால் பொர காற்று வீசுவதனால், கலங்கி நடுங்கி, வாகை உழிஞ்சில்,  வெண் நெற்று ஒலிக்கும் வெள்ளை விதைக் கூடு ஒலிக்கும், வேய் பயில் மூங்கில் நிறைந்த, அழுவம் காடு, முன்னி யோரே சென்றவர்கள்

கருத்துரை :
வாகை மரங்களின் முதிர்ந்த காய்கள் நிறைந்த மூங்கில்   காட்டுப் பகுதியில் நடக்கையில்,  வீசும் காற்றினால் வாகை மரங்களின் முதிர்ந்த வெள்ளை விதைக் கூடுகள் (நெற்றுகள்)  நடுங்கி ஒலி எழுப்புகின்றன. அந்த ஓசையானது ஆரியக் கழைக் கூத்தாடிகள் கயிற்றில் நடக்கையில் அடிக்கும் பறையைப் போல் உள்ளது. அப்பகுதியில் தலைவி, தலைவனுடன் நடக்கிறாள். ஆனால் அவர்களுக்கு மணமாகவில்லை என்பதைத் தலைவியின் பெற்றோர் அணிவித்த காற்சிலம்பை அவள் கழற்றாமல் இருப்பதிலிருந்து தெரிகிறது. தலைவனோ வில்லை உடைய வீரக்கழல் அணிந்தவன். தலைவி வளையல் அணிந்தவள்.  கால்களில் சலங்கை.  அணிந்தவள். மென்மையான அடி வைத்து நடப்பவள். அவளால் இப்பகுதியில் எப்படி நடந்து செல்ல முடியும் என அவர்களைப் பார்க்கும் நல்லோர், இவர்கள் யாரோ என இரங்குகின்றனர்.

வில்லை வைத்திருக்கும் அவனுடைய கால்களில் தொடி.  வளையல் அணிந்த அவளுடைய கால்களில் சலங்கை.  இந்த நல்லவர்கள் யார், ஆரியக் கழைக் கூத்தாடிகளின் பறைக் கொட்டு போல், வீசும் காற்றினால் வாகை மரங்களின் விதைக் கூடுகள்  நடுங்கி ஒலிக்கும் மூங்கில் நிறைந்த காட்டுக்குள் செல்பவர்கள்?

(பின் குறிப்பு:

மணம் புரிவதற்கு முன், மணமகளது காலில் பெற்றோர்களால் அணியப்பட்ட சிலம்பை நீக்குதற்கு 'சிலம்பு கழி நோன்புஒரு சடங்கு செய்யப்படும்; தலைவியின் பெற்றோர் அணிவித்த காற்சிலம்பை அவள் கழற்றாமல் இருப்பதிலிருந்து அவர்களுக்கு மணமாகவில்லை என்பதைக் கண்டோர் அறிந்து கொள்கின்றனர்.)